Jul 27, 2011

நோன்பு உங்களைத் தூய்மையுடையோராக்கலாம்!


1. ரமளான் மாதத்தின் நோன்பை நோற்பது கடமை

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
 இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது(ஸல்)அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: ரமளான் மாதத்தின் நோன்பு முஸ்லிமான புத்தியுள்ள, வயது வந்த ஆண் பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால் சிலருக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியிருக்கிறது. நோன்பை விடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் எனும் தலைப்பில் இதன் விபரங்களை பார்க்கவும்.

2. ரமளான் மாதத்தின் சிறப்புகள்
1) ரமளான் மாதம் வந்து விட்டால் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் "நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)
3) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்ப்பவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். ஆகவே நோன்பில் உம்ரா செய்து கொள் என ஒரு அன்சாரிப் பெண்ணுக்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
5) ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. இன்னும் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஒவ்வொரு வருடத்திலும் அல்லாஹுதஆலா பல விஷேச தினங்களை ஏற்படுத்தி அவற்றில் செய்யும் நல்அமல்களுக்கு பன் மடங்கு நன்மைகளைத் தருகின்றான். அப்படிப்பட்ட நாட்களைக் கொண்டது தான் ரமளான் மாதமும். இதில் செய்யும் நன்மைகளுக்கு அதிக கூலிகள் கொடுக்கப்படுகின்றன. மற்ற மாதங்களில் செய்யும் அமல்களை விட இம்மாதத்தில் நபி(ஸல்)அவர்கள் அதிகமான அமல்களைச் செய்வார்கள். இம்மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது. அல்லாஹ்வின் அருள் இறங்குகின்றது, நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கின்றது; அல்லாஹ் பாவங்களை மன்னிக்கின்றான். "யார் இம்மாதத்திலும் அல்லாஹ்விடம் பிழை பொறுப்புத் தேடவில்லையோ அவன் நாசமாகட்டும்" என ஜிப்ரயீல்(அலை) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். நபி(ஸல்)அவர்கள் அதற்கு ஆமீன் சொன்னார்கள். இன்னும் யார் இம்மாதத்தின் நன்மையை இழந்தானோ அவன் எல்லா நன்மைகளையும் இழந்தவனாவான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆகவே யாரெல்லாம் இம்மாதத்தை அடைந்தீர்களோ இதை ஒரு பெரும் பாக்கியமாகக் கருதி நன்மைகளை அதிகம் செய்யுங்கள்! இன்னும் செய்த தவறுகளுக்காக பாவமன்னிப்பும் தேடுங்கள், அல்லாஹ் நம் அனைவரையும் அவனின் அருளையும் பாவமன்னிப்பையும், நரக விடுதலையையும் பெற்றவர்களாக ஆக்குவானாக!

3. ரமளான் நோன்பின் சிறப்புகள்
1) "நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும்" ஆகவே நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது. இன்னும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களையும் செய்யக் கூடாது. யாராவது சண்டையிட்டால் அல்லது ஏசினால் "நிச்சயமாக நான் நோன்பாளி, நான் நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும். என் உயிர் எவனிடம் இருக்கிறதோ அந்த இறைவன் மீது ஆணையாக நோன்பாளியின் வாயிலிருந்து வெளியாகும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாகும். இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) நோன்பு நோற்றவன் தன் உணவையும், குடிபானத்தையும், இச்சையையும் எனக்காகவே விட்டுவிடுகிறான். நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மைகளை வழங்குவேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
3) சுவர்க்க வாசல்களில் ஒன்றுக்கு "அர்ரய்யான்" என்று சொல்லப்படும். மறுமை நாளில் அவ்வாசலில் நோன்பாளிகளைத் தவிர வேறு யாரும் நுழைய மாட்டார்கள். "நோன்பாளிகள் எங்கே" என்று அழைக்கப்படும். அப்போது நோன்பாளிகள் எழுந்து அவ்வாசல் வழியாக நுழைவார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல் மூடப்படும். அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாசலில் நுழையமாட்டார்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
4) நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யும் எல்லா அமல்களுக்கும் பத்திலிருந்து எழுநூறு மடங்காக (கூலி) கொடுக்கப்படுகின்றது. அது(நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன். (காரணம்) அவனுடைய இச்சையையும், உணவையும் எனக்காக விட்டுவிடுகின்றான். நோன்பு திறக்கும்போதும், இன்னும் அவனுடைய இறைவனை சந்திக்கும் போதும் ஆகிய இரு சந்தோஷங்கள் நோன்பாளிக்கு இருக்கின்றன. நிச்சயமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட மிகவும் நறுமணமுள்ளதாயிருக்கும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
விளக்கம்: வணக்கங்களை அல்லாஹ் நம்மீது கடமையாக்கியது நாம் அல்லாஹ்விற்கு, கட்டுப்படுகின்றோமா இல்லையா? என்பதை சோதனை செய்வதற்குத்தான். வணக்கங்களை நாம் செய்வதினாலோ, அல்லது விடுவதினாலோ அல்லாஹ்விற்கு எந்த லாபமோ, நஷ்டமோ கிடையாது. இன்னும் அல்லாஹ் ஒவ்வொரு வணக்கத்தைக் கடமையாக்குவதின் மூலமாக "எப்படிப்பட்ட தியாகத்தையும் அல்லாஹ்விற்காக நாம் செய்யத் தயாராக இருக்கின்றோமா" என்பதைச் சோதிப்பதற்குத்தான். அப்படிச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான். இந்த வணக்கங்களின் வரிசையில் உள்ளதுதான் நோன்பு. நோன்பைப் பொறுத்தவரையில் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கும் முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வது, இவைகளை வெறும் சடங்குக்காகச் செய்யக்கூடாது. வணக்கம் என்ற எண்ணத்தோடு செய்ய வேண்டும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வது தான்.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
விசுவாசங்கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு(நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது. (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று)பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2:183)
தக்வா(இறையச்சம்)என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்தும் தடை செய்தவைகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். "தக்வாவின் உரிய தோற்றத்தை" நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை. தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ''இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்"". இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால் தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்து தொழ ஆரம்பித்து விடுவார். பாவங்களில் ஈடுபடக்கூடியவர் அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹுவைப் பயந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான். ஆகவே அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மது(ஸல்)அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்தும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்ந்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீதுல் குத்ஸியில் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள், "நோன்பைத் தவிர ஆதமுடைய மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே" அது (நோன்பு)எனக்குரியது, அதற்கு நானே கூலிகொடுக்கின்றேன், (காரணம்)அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் எனக்காகவே விட்டுவிடுகின்றான். எல்லா வணக்கங்களும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்குக் காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ்(மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால் தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று மற்ற எல்லா விஷயங்களிலும், எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சிவாழ்வோமாக..!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கின்றாரோ அதில் எந்தவித பிரயோஜனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டு விடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவங்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமளான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு. ஏன் இந்த நல்ல பண்புகளை நோன்பு அல்லாத மாதங்களிலும் தொடரக்கூடாது? நோன்பு மாதத்தில் எந்த இறைவனை அஞ்சி இந்த நல்ல செயல்களில் ஈடுபட்டோமோ அவன் நோன்பு அல்லாத மாதங்களில் நம்மைக் கண்காணிப்பதில்லையா? நோன்பு அல்லாத மாதங்களில் நாம் மரணிப்பதற்கு வாய்ப்பில்லையா? ஏன் நோன்பு மாதத்தோடு இந்த நல் அமல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்? சிந்தியுங்கள்! விடை கிடைக்கும். நல் அமல்களை, தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...!

4. பிறை கண்ட பின்பே நோன்பும் பெருநாளும்
1) பிறையைக் காணாத வரை நீங்கள் நோன்பு நோற்கவும் வேண்டாம், நோன்பை விடவும் வேண்டாம். பிறை தெரியாமல் மேகம் மறைத்துவிட்டால்(அம்)மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ரமளான் மாதத்தின் ஆரம்பத்தையும், முடிவையும் தெரிந்து கொள்வதற்கு பிறைதான் அடையாளமாகும். ஆனால் மேகம் தெளிவில்லாமல் இருந்து ரமளான் மாதத்தின் பிறை தென்படவில்லையானால் நோன்பு மாதத்துக்கு முந்திய ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு அதற்கு அடுத்த நாள் ரமளான் நோன்பை நோற்க வேண்டும். காரணம் சந்திர மாதத்தில் முப்பது நாளை விட அதிகமாக ஒரு மாதமும் வரமுடியாது. "முப்பது நாட்களாகவும் இருபத்தி ஒன்பது நாட்களாகவும் தான் மாதம் வரும் என்பதாக நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்."

5. சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கக்கூடாது
1) ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

விளக்கம்: ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் சுன்னத்தான எந்த நோன்பையும் நோற்கக்கூடாது. காரணம் அந்த இரு நாட்களும் ரமளான் மாதமாக இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றது. இதற்கு "சந்தேக நாட்கள்" என்று சொல்லப்படும். உதாரணமாக ஒவ்வொரு வாரத்திலும் திங்கள், வியாழன் இரு நாட்களும் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். இந்த இரு நாட்களில் வழமையாக நோன்பு நோற்று வருபவருக்கு ரமளான் மாதத்துக்கு முந்திய ''சந்தேகமான நாட்களிலும்" நோன்பு நோற்க அனுமதியுள்ளது.

6. ஸஹர் உணவு உண்பதின் சிறப்பு
1) ஸஹர் செய்யாமலும், நோன்பு திறக்காமலும் நீங்கள் தொடர் நோன்பு நோற்க வேண்டாம் என நபி(ஸல்)அவர்கள் (ஸஹாபாக்களை) தடை செய்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அப்படி நோன்பு நோற்கின்றீர்களே? என ஸஹாபாக்கள் கேட்டார்கள். நான் உங்களைப் போன்றல்ல, எனக்குக் குடிக்கவும், உணவும் கொடுக்கப்படுகின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். இன்னும் சில அறிவிப்பில்: என் இறைவன் எனக்கு உணவளிக்கின்றான்; மேலும் பானமும் புகட்டுகின்றான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
2) ஸஹர் உணவை உண்ணுங்கள், நிச்சயமாக ஸஹர் உணவில் அல்லாஹ்வின் அருள் இருக்கின்றது என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
3) நபி(ஸல்)அவர்கள் ஸஹர் செய்து கொண்டிருக்கும்போது ஒரு நபித்தோழர் நுழைந்தார். ஸஹர் உணவு உண்பது அல்லாஹ் உங்களுக்களித்த அருளாகும். அதை விட்டு விடாதீர்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
4) நீங்கள் ஸஹர் உணவை உண்ணுங்கள். அது அருள் நிறைந்த உணவாகும் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)

5) நமது (முஸ்லிம்களின்) நோன்புக்கும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் நோன்புக்கும் உள்ள வித்தியாசம் ''ஸஹர் உணவு உண்பதுதான்" என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: நஸயீ)
விளக்கம்: ஸஹர் உணவென்பது நோன்பு நோற்பதற்காக இரவின் கடைசிப்பகுதியில் உண்ணும் உணவாகும். நோன்பு நோற்பவர் இந்த உணவை உண்பது "வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்". இதனால் நோன்பாளி நோன்பைச் சிரமமின்றி நோற்பதற்கு வாய்ப்புள்ளது. ஸஹர் செய்யாமலும் நோன்பு திறக்காமலும் தொடர் நோன்பு நோற்பதை நபி(ஸல்)அவர்கள் தடுத்துள்ளார்கள். இன்னும் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் நோற்கும் நோன்பிற்கும் நாம் நோற்கும் நோன்பிற்கும் மத்தியிலுள்ள வித்தியாசம் ஸஹர் உணவு உண்பதுதான். அவர்கள் ஸஹர் உண்ணாமலேயே நோன்பு நோற்பார்கள். ஆகவே அல்லாஹ் நமக்களித்த அருளைப் பெற்று நபிமார்களின் சுன்னத்தைக் கடைபிடிப்போமாக..!

7. ஸஹர் உணவை தாமதப்படுத்துதல்
1) நான் நபி(ஸல்)அவர்களுடன் ஸஹர் உணவு உண்டேன். பின்பு தொழுகைக்காக நபியவர்கள் எழுந்து சென்று விட்டார்கள் என ஸைத் இப்னு ஸாபித்(ரலி)அவர்கள் கூறினார்கள். (ஸுப்ஹுடைய) பாங்குக்கும் ஸஹர் உணவுக்கும் மத்தியில் எவ்வளவு இடைவெளி இருந்தது என அனஸ்(ரலி)அவர்கள் கேட்டதற்கு ஐம்பது ஆயத்து ஓதும் அளவு என்று விடையளித்தார்கள். (ஆதாரம்: புகாரி)
விளக்கம்: ஸஹர் உணவை இரவின் கடைசிப்பகுதி வரை, பிற்படுத்துவது சுன்னத்தாகும், அதாவது ஸஹர் உணவுக்கும் ஸுப்ஹுடைய பாங்குக்கும் மத்தியில் ஐம்பது ஆயத்து ஓதுவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படுமோ அவ்வளவு நேரம் பிற்படுத்த வேண்டும். இதுவே நபிவழியாகும். ஆனால் ஃபஜ்ருடைய நேரம் வந்த பின்(அதாவது ஸுப்ஹுடைய பாங்கு சொல்லப்பட்டதும்) உண்ணவோ குடிக்கவோ கூடாது.

8. குளிப்பு கடமையான நிலையில் நோன்பு
1) நபி(ஸல்)அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: நோன்பு நோற்பதற்கு முன் அதாவது இரவில் ஒருவர் முழுக்காளியாக இருந்து ஸப்ஹுடைய பாங்குக்குப் பின் குளிப்பதில் எந்த குற்றமுமில்லை. அந்த நோன்பு பரிபூரணமானதுதான். அதே போல் பகல் நேரத்தில் நோன்பு நோற்றவர் தூக்கத்தினால் குளிப்பு கடமையாகிவிட்டால் குளித்துக் கொண்டால் மாத்திரம் போதும். ஆனால் வேண்டுமென்றே ஒருவர் நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் முழுக்காளியாவது அல்லாஹ்விடத்தில் பெரும் குற்றமாகும். அது நோன்பையும் முறித்துவிடும்.

9. நோன்பை விட அனுமதிக்கப்பட்டவர்கள்
أَيَّامًا مَعْدُودَاتٍ فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَ وَأَنْ تَصُومُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ. شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنْ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمْ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمْ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمْ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பிட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்கவேண்டும். எனினும் (கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஃபித்ராவாக ஒரு மிஸ்கீனுக்கு(ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். இன்னும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது. ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்) நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). ரமளான் மாதம் எத்தகைய தென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (மழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை-தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்தில் இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களில் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்கவேண்டும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). அல்குர்ஆன் 2:184,185)
1) ஹம்ஸா இப்னு அம்ருல் அஸ்லமி என்னும் நபித்தோழர் நான் பிரயாணத்தில் நோன்பு நோற்கலாமா? என நபி(ஸல்)அவர்களிடத்தில் கேட்டார்கள். (அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்) நீங்கள் விரும்பினால் நோன்பு நோற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் விரும்பினால் நோன்பை விட்டுவிடுங்கள் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
2) நாங்கள் நபி(ஸல்)அவர்களுடன் ஒரு யுத்தத்துக்குச் சென்றிருந்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பை விட்டவர்களும் இருந்தனர். நோன்பு நோற்றவர் நோன்பு நோற்காதவரையோ, நோன்பு நோற்காதவர் நோன்பு நோற்றவரையோ குறை கூறவில்லை. யாருக்கு சக்தி இருக்கின்றதோ அவர் நோன்பு நோற்பது அவருக்குச் சிறந்ததென்றும், யாருக்கு அதற்கு சக்தி இல்லையோ அவர் நோன்பை விடுவது சிறந்ததென்றும் அவர்கள் கருதினார்கள் என அபூ சயீதுல் குத்ரி(ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
3) நபி(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தின் போது நிழலிலே ஒருவரைச் சூழ்ந்து மக்கள் கூடியிருப்பதைக் கண்டு இந்த உங்களின் நண்பருக்கு என்ன ஏற்பட்டு விட்டது? என கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர் நோன்பாளி என கூறினார்கள். பிரயாணத்தில் நோன்பு நோற்பது நல்ல செயலில்லை. அல்லாஹ் உங்களுக்கு அளித்த அனுமதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில் ஒரு மரத்தின் நிழலிலே ஒருவர் மீது தண்ணீர் தெளிக்கப்படுவதை நபி(ஸல்) அவர்கள் பார்த்தார்கள். ஆதாரம்: நஸயீ
4) நபி(ஸல்) அவர்களுடன் கோடைகாலத்தில் நாங்கள் ஒரு பிரயாணம் செய்தோம். எங்களில் நோன்பு நோற்றவர்களும் நோன்பு நோற்காதவர்களும் இருந்தார்கள். நாங்கள் (வெப்பத்தின் காரணமாக அப்பிரயாணத்திலே) நிழலில் உட்கார்ந்தோம். நோன்பு நோற்றவர்கள்(களைத்து) விழுந்துவிட்டார்கள். நோன்பில்லாதவர்கள் எழுந்து பிரயாணிகளுக்குத் தண்ணீர் புகட்டினார்கள். இதைப் பார்த்த நபியவர்கள் ''நோன்பில்லாதவர்கள் இன்று அதிக நன்மை பெற்றுவிட்டார்கள்" எனக் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ
5) நிச்சயமாக அல்லாஹ் பிரயாணிக்கு தொழுகையில் பாதியையும்(அதாவது நாலு ரக்அத் தொழுகையை இரண்டு ரக்அத்தாக சுருக்குவதற்கும்) நோன்பை விடுவதற்கும் பாலூட்டும் தாய்க்கும் நோன்பை விடுவதற்கு அனுமதித்து விட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்;: நஸயீ
6) மக்கா வெற்றி பெற்ற வருடம் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றவர்களாக நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். கதீத் என்னும் இடத்தை அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். ஆதாரம்: முஸ்லிம்
7) கோடைகாலத்தின் போது நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பிரயாணத்தில் சென்றிருந்தோம். ஒரு மனிதர் தன் தலைக்கு மேல் கையை வைக்கும் அளவுக்கு அந்த சூடு இருந்தது. எங்களில் நபியவர்களையும், அப்துல்லாஹ் இப்னு ரவாஹா(ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்கவில்லை என அபூதர்தா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பது முஸ்லிமான புத்தியுள்ள, வயதுவந்த ஆண், பெண் ஒவ்வொருவருக்கும் கடமையாகும். ஆனால், பிரயாணி, நோயாளி, கர்ப்பிணிப்பெண், பாலூட்டும் தாய், நோன்பு நோற்க இயலாத வயோதிகர்கள், நோயிலிருந்து குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் இவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதி உண்டு. ஆனால் பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் நோயாளியின் நோய் குணமானதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும். கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய் இவ்விருவரும் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்களும் குழந்தையை பெற்றெடுத்ததற்குப் பிறகு அல்லது பாலூட்டியதற்குப் பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். நோன்பு நோற்கவே முடியாத வயோதிகர்கள் மற்றும் நோய் குணமாவதற்கு வாய்ப்பில்லாத நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளித்தால் போதும்; விடுபட்ட நோன்புகளை நிறைவேற்ற வேண்டியதில்லை. அல்லாஹ் நன்கறிந்தவன்.

10. நோன்பு நேரத்தில் தவறிலிருந்து விலகி இருத்தல்
1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
விளக்கம்: நோன்பு நோற்பதென்பது வெறும் பசி, தாகத்தோடு இருப்பது மட்டுமல்ல, பசி தாகத்தை கட்டுப்படுத்துவதைப் போல மற்ற எல்லாத் தவறுகளையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். யார் நோன்புநோற்றுக் கொண்டு தவறான பேச்சுக்கள் இன்னும் தவறான செயல்களைச் செய்கின்றாரோ அவர் பசித்திருந்ததையும் தாகித்திருந்ததையும் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளமாட்டார். ஆகவே நோன்பு மாதத்தில் எல்லாத் தவறுகளையும் விட்டுவிடுங்கள். ஆனால் இன்று நோன்பு காலத்தில்தான் நோன்பு நோற்றவர்கள் இரவெல்லாம் வீணாக விழித்திருந்து சுப்ஹு தொழுகையின்றி தூங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலரோ பகலையெல்லாம் தூக்கத்திலேயே கழித்து, தொழுகைகளை விட்டு விடுகின்றார்கள். அல்லாஹ் நம்மீது நோன்பைக் கடமை யாக்கியது நாம் பாவங்களைச் செய்வதற்கும் ஃபர்லான தொழுகைகளை விடுவதற்குமா? நிச்சயமாக இல்லை! நாம் எல்லாப் பாவங்களையும் விட்டு தொழுகைகள் மற்றும் நல்அமல்களைச் செய்வதற்குத்தான் அல்லாஹ் அம்மாதத்தை ஏற்படுத்தியிருக்கின்றான். ஆகவே தவறுகளை முற்றாக விட்டு தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுது எல்லா நல்அமல்களையும் செய்யுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் எல்லா தவறுகளையும் முற்றாக விடுவதற்கு வாய்ப்பளிப்பானாக!

11. நோன்பாளி மறதியாக சாப்பிட்டால் குடித்தால்
1) (யாராவது) மறந்துபோய் சாப்பிட்டால் அல்லது குடித்தால் அவர் அவருடைய நோன்பை பரிபூரணப்படுத்தட்டும், நிச்சயமாக அல்லாஹ்தான் அவரை சாப்பிடவும், குடிக்கவும் வைத்தான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

விளக்கம்: யாராவது நோன்பு நேரத்தில் மறதியாக சாப்பிட்டால் அல்லது குடித்தால் குற்றமில்லை. ஞாபகம் வந்ததும் சாப்பிடுவதை குடிப்பதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அவருடைய நோன்பு பரிபூரணமானதே. யார் வேண்டுமென்றே சாப்பிடுகின்றாரோ அல்லது குடிக்கின்றாரோ அவரின் நோன்பு முறிந்துவிடும், இன்னும் அது பெரும் குற்றமாகும். அந்த நோன்பைப் பிறகு நோற்க வேண்டும்.

12. நோன்பாளி குளிப்பதில் தவறில்லை
1) நபி(ஸல்) அவர்கள் (உடலுறவின் காரணமாக) முழுக்கான நிலையில் பஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்டு நோன்பு நோற்பார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுக்கொண்டிருக்கும் போது வெப்பம் அல்லது தாகத்தின் காரணமாக தன் தலைமீது தண்ணீரை ஊற்றிக் கொண்டார்கள் என்பதாக சில நபித்தோழர்கள் மூலமாக அபூபக்ர் இப்னு அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், முஅத்தா, அபூதாவூத்
3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது ஈரத்துணியை தன்மீது போடுவார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: தேவைப்படும் போது நோன்பாளி குளித்துக் கொள்வதில் தவறில்லை. புகாரி(ரஹ்) அவர்கள் தன் புகாரி கிரந்தத்திலே நோன்பாளி குளிக்கும் பாடம் என தலைப்பிட்டு மேலே குறிப்பிட்ட ஹதீஸ்களைக் கூறுகின்றார்கள்.

13. நோன்பாளி பல்துலக்குதலில் குற்றமில்லை
1) என் உம்மத்தின் மீது கஷ்டம் இல்லையென்றிருந்தால் ஒவ்வொரு முறை உளுச் செய்யும் போதும் பல் துலக்குவதற்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, நஸயீ
2) நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது கணக்கிட முடியாத அளவுக்கு பல் துலக்குவதை நான் பார்த்திருக்கிறேன் என ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது பகலின் ஆரம்பம் இன்னும் கடைசி நேரத்தில் பல் துலக்குவார்கள். ஆதாரம்: புகாரி
விளக்கம்: பல் துலக்குவது நபியவர்கள் மிகவும் வலியுறுத்துகின்ற நடைமுறையாகும். இதனை நோன்பிலும் நோன்பு அல்லாத காலங்களிலும் செய்துள்ளார்கள். சிலர் நோன்பு நோற்றவர் பல் துலக்குவது கூடாது, அல்லது லுஹர் நேரத்திற்குப்பின் செய்யக்கூடாது என்று கூறுவது ஆதாரமற்றதாகும்.

14. நோன்பாளியின் உளு
1) அல்லாஹ்வின் தூதரே! உளுவைப் பற்றி எனக்குக் கற்றுக்கொடுங்கள் என நபி(ஸல்)அவர்களிடத்தில் நான் கேட்டேன். உளுவைப் பரிபூரணமாகச் செய்து கொள்ளுங்கள் என கூறினார்கள். இன்னும் விரல்களுக்கு மத்தியில் கோதிக் கழுவுங்கள், நோன்பில்லாத நிலையில் மூக்குக்குத் தண்ணீர் செலுத்துவதை அதிகப்படுத்துங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என லகீத் இப்னு சபீரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவூத்
விளக்கம்: நோன்புநோற்றவர் உளுச் செய்தால் நாசிக்கும் வாய்க்கும் தண்ணீர் செலுத்தும்போது அடித்தொண்டை இன்னும் அடிமூக்கு வரைக்கும் தண்ணீரைச் செலுத்தாமல் நோன்பில்லாத நேரத்தில் செய்வதை விட குறைத்துச் செய்ய வேண்டும். அடிமூக்கு அடித்தொண்டை வரைக்கும் தண்ணீரைச் செலுத்தினால் வாய்க்குள் தண்ணீர் செல்வதற்கு வாய்ப்பிருக்கின்றது.

15. நோன்பின் நிய்யத்தை பஜ்ருக்கு முன் வைப்பது அவசியம்
1) அமல்களுக்குக் கூலி கொடுக்கப்படுவது எண்ணங்களைப் பொறுத்துத்தான் என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) பஜ்ருக்கு முன்னால் யார் நிய்யத்து வைக்கவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நிய்யத் என்பது உள்ளத்தில் நினைப்பதற்குச் சொல்லப்படும். இன்றைய நோன்பை நோற்க வேண்டும் என்று நினைத்து ஸஹர் உணவு உண்பதே நிய்யத்தாகும். ஆனால் இன்று நிய்யத் என்ற பெயரில் சில வார்த்தைகள் (இந்த வருடத்து ரமளான் மாதத்தின் பர்ளான நோன்பை நாளைப்பிடிக்க அல்லாஹ்வுக்காக நிய்யத் வைக்கின்றேன் என்று) சொல்லிக் கொடுக்கப்படுகின்றது. இப்படி நபியவர்கள் செய்யவுமில்லை. சொல்லித்தரவுமில்லை. இதற்கு நிய்யத் என்று சொல்லப்படவும் மாட்டாது. மேலும், இன்றைய நோன்பை ஒருவர் நோற்க வேண்டும் என்று நிய்யத் இல்லாமல் (எண்ணமில்லாமல்) பஜ்ர் வரைக்கும் தூங்கிவிட்டால், அவருக்கு அன்றைய நோன்பை நோற்க முடியாது. காரணம் அவர் இரவில் நிய்யத் (எண்ணம்) வைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு நோன்பு நோற்க வேண்டும் என்று எண்ணி பஜ்ர் வரைக்கும் ஒருவர் தூங்கிவிட்டால், ஸஹர் உணவை உண்ணாவிட்டாலும் அவர் அன்றைய நோன்பை நோற்கலாம்.

16. பெருந்தொடக்குள்ள பெண்கள்
1) நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் வாழும்போது(மாதவிடாய் காரணமாக) சுத்தம் இல்லாமல் இருந்தால் (தொழவும் மாட்டோம், நோன்பு நோற்கவும் மாட்டோம்) சுத்தமானதும் நாங்கள் (விட்ட) நோன்புகளை நோற்கும்படி நபியவர்கள் எங்களுக்கு ஏவுவார்கள். ஆனால் விடுபட்ட தொழுகைகளைத் தொழும்படி ஏவமாட்டார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: பெண்கள் மாதவிடாய் மற்றும் பிள்ளைப் பேறினால் சுத்தம் இல்லாத காலங்களில் நோன்பு நோற்கக் கூடாது, சுத்தமானதும் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். அதற்காக எந்தப் பரிகாரமும் செய்யத் தேவையில்லை.

17. விரைவாக நோன்பு திறப்பது சுன்னத்தாகும்
1) நோன்பு திறப்பதை, (தாமதிக்காது) அவசரப்படுத்தும் காலம் வரைக்கும் என் உம்மத்தினர் நலவிலேயே இருப்பார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) நானும், மஸ்ரூக் என்பாரும் ஆயிஷா(ரலி) அவர்களிடத்தில் சென்று மூஃமின்களின் தாயே! நபி(ஸல்) அவர்களின் இரு தோழர்கள் நன்மை தேடும் விஷயத்தில் குறைவு செய்வதில்லை, ஒருவர் நோன்பு திறப்பதை அவசரப்படுத்தி நேரத்தோடு தொழுதும் விடுகின்றார். மற்றவர் நோன்பு திறப்பதைப் பிற்படுத்தி தொழுகையையும் பிற்படுத்துகின்றார் என்றனர். யார் நோன்பு திறப்பதையும் தொழுகையையும் அவசரப்படுத்துகின்றார்? என ஆயிஷா(ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) என்று நாங்கள் கூறினோம். அப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
இன்னும் ஒரு அறிவிப்பில், மற்ற நபித்தோழர் அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி) அவர்கள் என்று வந்திருக்கின்றது. ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: மஃரிப் நேரம் வந்ததும் நோன்பு திறப்பதே சுன்னத்தாகும். இன்று சிலர் மஃரிப் நேரம் வந்த பின்பும் நோன்பு திறக்காமல் பேணுதல் என்று சொல்லிக் கொண்டு சூரியன் மறைந்த பின்பும் நோன்பு திறப்பதைப் பிற்படுத்துகின்றார்கள். ஆனால் நபியவர்களோ மஃரிப் நேரம் வந்ததும் நோன்பை திறக்கச் சொல்லியிருக்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறியதற்கு மாறாகச் செய்வது பேணுதலாகுமா? இது இஸ்லாத்தில் புதிதாக ஏற்படுத்தப்பட்ட பித்அத்தாகும் என இப்னு ஹஜர்(ரஹ்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். (பத்ஹுல் பாரி 2:235)

18. பேரீத்தம் பழத்தால் நோன்பு திறப்பது சிறந்தது
1) நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் கனிந்த பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அது இல்லையென்றால் சாதாரண சில பேரீத்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறப்பார்கள். அதுவும் இல்லையென்றால் சில மிடர் தண்ணீர் குடித்துக்கொள்வார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) உங்களில் ஒருவர் நோன்பு திறந்தால் பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறக்கட்டும், அது கிடைக்கவில்லையென்றால் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறக்கட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ, அபூதாவுத்

19. நோன்பு திறந்த பின் ஓதும் துஆ
ذَهَبَ الظَّمَأُ وَ ابْتَلَّتِ الْعُرُوقُ، وَ ثَبَتَ الأجْرُ إنْ شَاءَ اللَّهُ
தஹபள்ளமஊ வப்தல்லதில் உரூக்கு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்.
பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் உறுதியாகிவிட்டது. ஆதாரம்: அபூதாவூத்

20. நோன்பு திறக்கும்போது கேட்கப்படும் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்
1) நோன்பாளி நோன்பு திறக்கும் போது கேட்கும் பிரார்த்தனை தட்டப்படமாட்டாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா
2) நோன்பாளி நோன்பைத் திறக்கும் வரைக்கும், நீதியான அரசன், அநியாயம் செய்யப்பட்டவன் இம்மூவரின் பிரார்த்தனைகள் தட்டப்படுவதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ

விளக்கம்: நோன்பாளி நோன்பு நேரத்தில் கேட்கும் பிரார்த்தனைகளையும், இன்னும் நோன்பு திறக்கும் போது கேட்கப்படும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆகவே நோன்பு காலங்களில் அதிக பிரார்த்தனைகளைச் செய்யுங்கள்.
இன்று முஸ்லிம்களில் பலர் நோன்பு திறக்கும் நேரத்தில் வீண் பேச்சுக்களிலும், வீண் வேலைகளிலும் ஈடுபடுகின்றார்கள். இப்படி இந்த சிறப்பான நேரங்களை வீணாகக் கழிக்காமல் அல்லாஹ்விடம் நமது ஈருலக வெற்றிக்காகவும், எல்லா முஸ்லிம்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். நமது சகல தேவைகளையும் பூர்த்தியாக்கித் தருவதற்கு அவன் போதுமானவன்.

21. நோன்பு திறக்க வைப்பதின் சிறப்புகள்

1) யார் ஒருவரை நோன்பு திறக்க வைக்கின்றாரோ நோன்பு நோற்றவருக்கு கிடைக்கும் நன்மையைப் போன்றே (ஒரு பங்கு) அவருக்கும் கிடைக்கும். அதனால் நோன்பு நோற்றவரின் நன்மையிலும் எதுவும் குறையாது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: நோன்பு திறக்க வைப்பது சிறந்த அமலாகும். நோன்பு திறக்க வைப்பதென்பது பெரிய அளவுக்கு உணவளிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஒரு பேரீத்தம் பழத்தைக் கொடுத்து நோன்பு திறக்க வைத்தாலும் இந்த நன்மை கிடைத்துவிடும். ஒவ்வொருவரும் அவரவரின் வசதிக்கு ஏற்றவாறு செய்து கொள்ளலாம்.

22. லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ. وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ. لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ. تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ. سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ.

நிச்சயமாக நாம் அதை(குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும்(ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி(நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை ஏதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபியவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதைப் பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி அது உங்களுக்கு நலமாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல்கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபியவர்கள் கூறினார்கள்:
அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதீ
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஒரு இரவுக்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கும் என்று அல்லாஹ் சூரத்துல் கத்ரில் கூறுகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மை கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். "83 வருடம் நாம் வாழ்வோமா?" என்பதே கேள்விக்குரியானது! ஆனால் ஒருநாள் அமல் செய்வதினால் அந்த நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட இந்தப்பத்து நாட்களில் நபியவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுவடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது நம்மைப் போன்ற சாதாரணமானவர்கள் எவ்வளவு அதிகமாக அமல்களில் ஈடுபட வேண்டும். சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே அச்சிறப்பான இரவில் தொழுகை, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களை அதிகமதிகம் செய்துவிட்டு மற்ற நாட்களை விட்டுவிடக்கூடியவர்கள் நம்மில் அதிகமானவர்கள் இருக்கின்றார்கள். இது நல்ல முடிவல்ல. நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ர் இரவைப் பற்றி சொல்வதற்காக வெளியில் வந்தார்கள். அல்லாஹ் அதை மறக்கடித்து விட்டான். ஆனால் அந்த இரவை நாம் தெரிந்து கொள்வதற்கு நபி(ஸல்) அவர்கள் சில அடையாளங்களைக் கூறினார்கள். "ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நாட்களின் ஒற்றைப்படை நாட்கள்" இப்படி கூறுவதினால் "ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களில் அமல்கள் செய்யப் தேவையில்லை" என்று விளங்கிக்கொள்ளக்கூடாது. மற்ற 20 நாட்களை விட இந்த நாட்களில் அதிக அமல்களை செய்யவேண்டும் என்பதுதான்.

23. இஃதிகாஃப்

وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ
இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து(இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை(வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)
1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி(ஸல்)அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
2) நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரைக்கும் ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல்செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பிவிடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
விளக்கம்: இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதற்குச் சொல்லப்படும், நோன்பு காலத்திலும் நோன்பு இல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நோன்பு காலத்தில் இஃதிகாஃப் இருப்பது மிகச் சிறந்தது. நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் நோன்பு மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி வெளியில் செல்லக்கூடாது, நோன்பின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். எவருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

24. குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள்
1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும் குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும். குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆல இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்
3) உங்களில் சிறந்தவர்கள் குர்ஆனைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுத்தவர் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி
4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து(குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால் அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் சொல்ல மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ
6) "எவருடைய உள்ளத்தில் குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்" என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: திர்மிதீ.
விளக்கம்: குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும் அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள் அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ
திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)
நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நம்மை நோக்கி சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளைக்கு எத்தனை எழுத்துக்கள் படிக்க நமக்கு வாய்ப்பிருக்கிறது. அதன் நன்மைகளை நம்மால் கணக்கிட முடியுமா? சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து அதன்படி நடந்து ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

25. ஸதகத்துல் ஃபித்ர்
1) முஸ்லிமான ஆண், பெண், பெரியவர், சிறியவர், அடிமை சுதந்திரமானவர் அனைவர் மீதும் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை அல்லது ஒரு ஸாவு பேரீத்தம் பழம் ஆகியவற்றை ''தர்மமாக" கொடுக்கும்படி நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். மேலும் இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்காக மக்கள் வெளியேறுவதற்கு முன்னர் கொடுத்துவிட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்
2) நோன்பில் நிகழ்ந்த தவறிலிருந்து தூய்மைப்படுத்துவதற்காகவும் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் ஸதகாத்துல் ஃபித்ரைக் கடமையாக்கினார்கள். ஆதாரம்: அபூதாவூத்
3) ரமளானின் இறுதியில் உங்கள் நோன்புத் தர்மத்தைக் கொடுத்து விடுங்கள் என்று கூறி இத்தருமத்தை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: அபூதாவூத், நஸயீ
4) நபி(ஸல்) அவர்கள் அழைப்பாளர்களை மக்காவின் தெருக்களுக்கு அனுப்பி "தெரிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸதகத்துல் ஃபித்ர் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்" என்ற வாசகத்தை சொல்லச் சொன்னார்கள். ஆதாரம்: திர்மிதி
விளக்கம்: ரமளான் மாத வழிபாடுகளில் ஸதகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். இஸ்லாத்தில் இரு பெருநாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. வருடம் முழுவதும் வறுமையில் வாடி வதங்கி உணவிற்கு வழியின்றித் திண்டாடும் நம் முஸ்லிம் சகோதரர்கள் எத்தனை எத்தனையோ பேர்!!! இவர்கள் பெருநாளில் மட்டுமாவது தம் வறுமையை மறந்து மகிழ்வாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் நம் ஏழைச் சகோதரர்களின் துயர் துடைக்க இஸ்லாம் அத்தருமத்தைக் கடமையாக்கியுள்ளது. இத்தர்மம் ஏழைகளின் உணவாகப் பயன்படுவதோடு அத்தர்மம் செய்தவர் நோன்பு நோற்றிருக்கும் போது செய்த தவறுகளுக்குப் பரிகாரமாகவும் அமைகின்றது. இது இரக்கப்பட்டு நாம் விரும்பிய அளவு கொடுக்கும் தர்மமல்ல. மாறாக "தகுதியுள்ள ஒவ்வொருவரும் இதை நிறைவேற்றியே ஆக வேண்டும் என வலியுறுத்தப்பட்ட கட்டளையாகும்" ஏழைகளின் துயர்துடைக்கவும் சகோதர வாஞ்சையை நினைவூட்டவும் கடமையாக்கப்பட்டுள்ளது. இத்தர்மத்தை நாம் அனைவரும் முறையாக நிறைவேற்றுவோமாக!

ஸதக்கத்துல் ஃபித்ராவின் சட்டங்கள்
கடமை: இது முஸ்லிம்களான ஆண், பெண், சிறியோர், பெரியோர், ஆகிய அனைவர் மீதும் கடமையாகும். எனவே குடும்பப் பொறுப்பாளர் அவர் குடும்பத்திலுள்ள அனைவருக்காகவும் இத்தர்மத்தைக் கொடுக்க வேண்டும். பெருநாள் அன்று தன்னுடைய செலவு போக மீதம் பொருள் மற்றும் தானியம் இருப்பின் அவர்கள் இத்தருமத்தைக் கொடுக்க தகுதி பெற்றவர். பெருநாள் அன்று செலவிற்கு பொருள் மற்றும் தானியம் இல்லாதவர்கள் இத்தர்மத்தைப் பெற்றுக் கொள்ள தகுதி பெறுவார்கள். அப்படிக் கொடுக்கும்படிதான் நம்மை நபி(ஸல்) அவர்கள் ஏவியிருக்கின்றார்கள்.
அளவு: இரண்டு கைகள் நிறைய அள்ளும் அளவு ஒரு முத்து எனப்படும். இவ்வாறு நான்கு மடங்கு சேர்ந்தது ஒரு ஸாவு எனப்படும். நபியவர்கள் ஒரு ஸாவு கொடுத்துள்ளனர். இதன் எடை தானியத்திற்கேற்ப வேறுபடும். எனவே கை அளவை அடிப்படையாகக் கொள்வதே பேணுதலாகும்.
நாள்: இத்தர்மத்தை, பெருநாள் தொழுகைக்கு முன்னர் பங்கீடு செய்து விட வேண்டும். தொழுகைக்குப் பிறகு கொடுத்தல் இக்கடமை நிறைவேற்றியவராக மாட்டார். ஷவ்வால் மாதத்தின் பிறை கண்டதிலிருந்து பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன் இத்தர்மத்தை கொடுத்துவிட வேண்டும். பெருநாளைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்னால் இத்தர்மத்தை பங்கீடு செய்வதில் தவறில்லை.

26. பெருநாள் தொழுகை
1) நபி(ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: திர்மிதீ
2) ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஆதாரம்: புகாரி
3) நபி(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் முதலி ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: அஹ்மத், இப்னுமாஜா
4) நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் புறப்பட்டு இரண்டு ரக்அத்கள் தொழுதனர். அதற்கு முன்பும் பின்பும் எதையும் அவர்கள் தொழவில்லை. அவர்களுடன் பிலால்(ரலி) அவர்களும் சென்றனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம்: புகாரி.
விளக்கம்: நோன்புப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன் ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாகச் சாப்பிட்டுவிட்டுச் செல்வதும், ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு உணவை உண்பதும் சுன்னத்தாகும். பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்தாகும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும், இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் கூற வேண்டும். ஈதுத் தொழுகைக்கு அதானோ, இகாமத்தோ கிடையாது. ஈதுத் தொழுகைக்கு முன் பின் சுன்னத்தும் கிடையாது.

27. நோன்பின் கடமைகள்(பர்ளுகள்)
1) பருவமடைந்த முஸ்லிமான ஆண், பெண் அனைவரின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும். பருவமடையாதவர்களின் மீது நோன்பு நோற்பது கடமையில்லை என்றாலும் பழக்கப்படுத்துவதற்காக நோன்பு நோற்குமாறு ஏவலாம்.
2) பைத்தியக்காரர்கள், நன்மை, தீமையை பிரித்தரிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர்கள் மீது
நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்குப் பகரமாக ஏழைகளுக்கு உணவு கொடுக்க வேண்டியதுமில்லை.
3) முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்கும் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
4) சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியள்ளது. நோய் நீங்கி பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
5) பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பிய பின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
6) கர்ப்பமாக இருக்கும் பெண், அல்லது பாலூட்டிக் கொண்டிருக்கும் பெண் நோன்பு நோற்பதால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதேனும் துன்பம் வரலாம் என்று பயந்தால் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. அந்தப் பயம் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
7) மாதவிடாய் அல்லது பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோற்கக்கூடாது. இரத்தம் நின்ற பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
8) நீரில் மூழ்குதல் மற்றும் தீ விபத்துப் போன்ற ஆபத்துக்குள்ளானவர்களைக் காப்பாற்றுவதற்காக நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. பிறகு அந்த நோன்பை நோற்க வேண்டும்.

28. நோன்பை முறிக்கும் செயல்கள்
1) சாப்பிடுதல், குடித்தல், புகைபிடித்தல் போன்றவற்றால் நோன்பு முறிந்துவிடும்.

2) முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்துவிடும். தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3) உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை(மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்குள் செலுத்தினால் நோன்பு முறிந்துவிடும்.
4) மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்துவிடும்.

29. அனுமதிகள்
1) நோன்பின் போது காயங்களுக்கு மருந்து போடுதல், பல் பிடுங்குதல், கண் காதுகளுக்கு சொட்டு மருந்திடுதல் போன்றவற்றிற்கு அனுமதியுள்ளது.
2) நோன்பு நாட்களின் பகற்பொழுதில் பல்துலக்குவது தவறில்லை. அது நோன்பல்லாத நாட்களின் சுன்னத்தாக இருப்பது போன்றே நோன்பு நாட்களிலும் சுன்னத்தாகும்.
3) குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்வது தவறில்லை. சுப்ஹு தொழுகைக்காக, குளித்துக் கொண்டாலே போதுமானது.
4) கடும் வெயிலின் காரணமாக, குளிர்ந்த நீரை உடலில் ஊற்றிக் கொள்வதிலோ, அல்லது பகல் மற்றும் மாலைப் பொழுதில் குளித்துக் கொள்வதிலோ தவறில்லை.
5) நோன்பு திறக்க எதுவும் கிடைக்காவிட்டால். நோன்பு திறக்கும் நேரத்தில், நோன்பு திறப்பதாக எண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு வாய்ப்பு கிடைக்கும்போது சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது.

6) வாய்க் கொப்பளிக்கும் போது தன்னை அறியாது தண்ணீர் தொண்டையில் இறங்கி விட்டால் நோன்பு முறியாது. ஆனால் அடித்தொண்டை வரை தண்ணீரை செலுத்தாமல் இருக்க வேண்டும்.
7) நேரம் தெரியாது சூரியன் மறைந்துவிட்டது என்று நினைத்து, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று நினைத்து, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரம் தெரிந்து விட்டால் உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.
8) காயங்கள், சிறு மூக்கு உடைதல், பல் பிடுங்குதல் போன்றவற்றால் இரத்தம் வெளியானால் நோன்பு முறியாது.
9) மறந்து அல்லது தெரியாமல் சாப்பிட்டால், அல்லது குடித்தோவிட்டால் நோன்பு முறியாது, ஆனால் நோன்பின் நினைவு வந்தவுடனேயே நிறுத்திக் கொள்ளவேண்டும்.

30. ஒழுக்கங்கள்
1) பஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும், சூரியன் மறைந்தவுடனேயே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2) பேரீத்தம்பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3) ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து பஜ்ருடைய நேரம் வந்துவிட்டது எனத் தெரிந்தும் கூட விடி ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பதும் தவறாகும். பஜ்ர் நேரம் வந்து விட்டால் எதையும் உண்ணக்கூடாது. இதுபோன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4) ஹலாலான உணவையே உட்கொள்ள வேண்டும். இதை எல்லாக் காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும்.
5) நோன்பாளி அதிகமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ளவேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருள் ஈட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6) கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக் கொள்ளவேண்டும்.
7) பெருநாள் தொழுகைக்கு முன்பு(ஸதகத்துல் ஃபித்ர்) எனும் பெருநாள் தர்மத்தை முறையாக கொடுக்க வேண்டும்.

31. ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்
1)      "யார் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச் சமம்". என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆதாரம்: முஸ்லிம்

Jul 26, 2011

உங்களது பெயரில் விதவிதமான கூகுள் லோகோவை உருவாக்குவதற்கு


உங்களுடைய பெயரில் கூகுளின் இணையதளம் வந்தால் எப்படி இருக்கும். அந்த வசதியை ஒரு இணையதளம் நமக்கு செய்து தருகின்றது.
இத்தளத்திற்கு சென்றவுடன் அதில் உள்ள Enter your Name Here என்கின்ற விண்டோவில் உங்களது பெயரை தட்டச்சு செய்யவும்.

அதன் கீழே உள்ள விண்டோவில் விதவிதமான எழுத்துருக்கள் இருக்கும். நமக்கு எந்த டிசைன் தேவையோ அந்த எழுத்தின் கீழே உள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்து என்டர் தட்டவும்.

சில வினாடிகளில் நமது பெயருடன் கூகுளின் இணைய தளம் ஓப்பன் ஆகும். கூகுளின் லோகோ ஸ்டைலிலும் உங்களுடைய பெயரை கொண்டு வரலாம்.

நீங்களும் உங்களுக்கு விருப்பமான பெயரை தட்டச்சு செய்து வேண்டியவர்களுக்கு அதன் லிங்கை அனுப்பி வையுங்கள். அவர்கள் அந்த லிங்கை கிளிக் செய்கையில் அவர்களுடைய பெயர் அங்கு கிடைக்கும்.

இதை நீங்கள் தொடக்க பக்கமாக மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது.

ஜும்ஆ நாளும் அதன் தனித்துவமும்


''நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது.'' (அல்குர்ஆன் 62:9)]
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)
"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414)]
எல்லாம் வல்ல அல்லாஹ் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அவர்களது சமுதாயத்தினருக்கும் வழங்கிய பாக்கியங்களில் மிகப் பெரும் பாக்கியம் ஜும்ஆ வெள்ளிக்கிழமையாகும். யூதர்களுக்கு சனிக்கிழமை புனித நாள் என்றால், கிறித்தவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை புனித நாள் என்றால் முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாளாகும்.
இன்று அரபகத்தைத் தவிர உலகத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாக அமைந்துள்ளது. வணக்கத்திற்காக அமைந்த அந்த ஞாயிற்றுக்கிழமை இன்று விடுமுறை என்ற பெயரில் வீண் கேளிக்கைகளில், திரைப்படக் கூத்துகளில் கழிந்து கொண்டிருக்கின்றது.
இதே போலத் தான் அரபகப் பகுதிகளில் வெள்ளிக்கிழமையின் அருமை பெருமை தெரியாமல், அரபக மக்களும் சரி! இங்கிருந்து போனவர்களும் சரி! வீடியோ பார்ப்பதிலும் வீணான காரியங்களிலும் ஈடுபட்டு அந்நாளின் புனிதத்தைப் பாழாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு சாரார் இந்நாளுக்குரிய அருமை பெருமைகளை, சிறப்புகளைத் தெரிந்து வணக்கங்களிலும் மார்க்க சொற்பொழிவுகளை ஏற்படுத்தி அதைக் கேட்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றார்கள். இதுபோல் நன்மையில் ஈடுபடுகின்ற மக்களுக்கு ஆர்வமூட்டுகின்ற வகையிலும் இந்நாளின் இன்ன பிற சிறப்புகளைத் தெரிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகவும் ஜும்ஆ நாளின் சிறப்புகளையும் ஜும்ஆ நாளை சும்மா கழிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் பார்ப்போம்.

நமக்கென்று அளிக்கப்பட்ட நன்னாள்
"இறுதிச் சமுதாயமான நாம் தான் மறுமையில் முந்தியவர்கள் ஆவோம். ஆயினும் சமுதாயங்கள் அனைத்திற்கும் நமக்கு முன்பே வேதம் வழங்கப்பட்டு விட்டன. நாம் அவர்களுக்குப் பிறகு வேதம் வழங்கப் பட்டோம். இது (வெள்ளிக்கிழமை, அவர்கள்) கருத்து வேறுபாடு கொண்ட நாளாகும். ஆகவே நாளை (சனிக்கிழமை) யூதர்களுக்குரியதும் நாளைக்கு அடுத்த நாள் (ஞாயிற்றுக்கிழமை) கிறித்தவர்களுக்கு உரியதும் ஆகும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 3486, முஸ்லிம் 1414)




உலகில் ஓர் உயர் நாள் :-
"சூரியன் உதயமாகும் நாட்களிலேயே மிகவும் சிறந்த நாள் ஜும்ஆ நாளாகும். அதில் தான் ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் சொர்க்க(தோட்ட)த்தில் தங்க வைக்கப் பட்டார்கள். யுக முடிவு நாளும் வெள்ளிக்கிழமை தான் ஏற்படும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 450)

உதயமாகும் இந்நாளில் ஓதவேண்டிய அத்தியாயம் :-
ஜும்ஆ நாளில் யாரேனும் கஹ்ஃப் (18வது) அத்தியாயத்தை ஓதினால் அடுத்த ஜும்ஆ வரை அவருக்குப் பிரகாசம் நீடிக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஸயீது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஹாகிம்)

இந்நாளில் ஓதப்படும் ஸலவாத் இறைத்தூதருக்குக் காட்டப்படல் :-
உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸீர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, "நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான்" என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: அபூதாவூத் 883)

(குறிப்பு : நமது ஸலவாத், ஸலாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

"நிச்சயமாக பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நஸயீயில் 1265வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப் பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப் படுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.)

ஒப்புக் கொள்ளப்படும் ஒரு துஆ நேரம் :-
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, "ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு" என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். "அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை" என்றும் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 935)

ஜும்ஆ தொழுகை
வியாபாரத்தை விட்டு விரைந்து செல்லல் :-
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. (அல்குர்ஆன் 62:9)

பத்து நாட்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படல்
"ஒரு ஜும்ஆவிலிருந்து மறு ஜும்ஆ வரை நிகழும் பாவங்களுக்கு ஜும்ஆ தொழுகை பரிகாரமாகும். ஐவேளைத் தொழுகைகளும் அதற்கு இடைப்பட்ட நேரங்களில் நிகழும் பாவங்களுக்குப் பரிகாரமாகும். ஆனால் பெரும் பாவங்களாக அவை இருக்கலாகாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 342, திர்மிதி 198)
"ஒருவர் குளித்து விட்டு ஜும்ஆவிற்கு வந்து தனக்கு நிர்ணயிக்கப்ட்ட அளவைத் தொழுகின்றார். பிறகு இமாம் தன் உரையை முடிக்கும் வரை மவ்னமாக இருந்து பிறகு அவருடன் தொழுகின்றார் என்றால் அவருக்கு அவருடைய அந்த ஜும்ஆவிற்கும் மறு ஜும்ஆவிற்கும் இடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன. மேலும் மூன்று நாட்கள் மன்னிக்கப்படுகின்றன" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

இதே கருத்தில் அபூதாவூத் (939), அஹ்மத் (6707) ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ள ஹதீஸில், ஒன்றுக்குப் பத்து என்பதற்கு ஆதாரமாக,
"நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்" (அல்குர்ஆன் 6:160)
என்ற வசனத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓதிக் காட்டியதாக இடம் பெற்றுள்ளது.
"ஜும்ஆ நாளில் குளித்து விட்டு இயன்ற வரை சுத்தமாகித் தமக்குரிய எண்ணையைத் தேய்த்துக் கொண்டு தமது வீட்டில் உள்ள நறுமணத்தைப் பூசிக் கொண்டு பள்ளிக்கு வந்து (வரிசையில் நெருக்கமாக அமர்ந்திருக்கும்) இரண்டு நபர்களைப் பிரித்து விடாமல், தமக்கு விதிக்கப்பட்டதைத் தொழுது விட்டு, இமாம் உரையாற்றத் தொடங்கியதும் வாய் மூடி மவுனமாக இருந்தால் அந்த ஜும்ஆவுக்கும் அடுத்த ஜும்ஆவுக்கும் இடையிலான பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஸல்மான் ஃபார்ஸி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 883)
முஸ்லிமில் அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 1400வது ஹதீஸில், இதே கருத்துடன் பல் துலக்குதல் என்ற வார்த்தை இடம் பெறுகின்றது. அபூதாவூதில் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் 293வது ஹதீஸில் இதே கருத்துடன், ‘நல்லாடை அணிதல்என்ற வார்த்தையும் இடம் பெறுகின்றன.

எடுத்து வைக்கும் அடியை தொடுத்து வரும் நன்மை :-
யார் (தலையை) கழுவி, குளித்து ஆரம்ப நேரத்திலேயே புறப்பட்டு முந்தியே (பள்ளிக்கு) வந்து, இமாமுக்கு நெருக்கமாக இருந்து உரையை செவியுற்று, ஜும்ஆவை வீணாக்காமல் இருக்கின்றரோ அவருக்கு அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஓர் ஆண்டு நோன்பு நோற்று, ஓர் ஆண்டு நின்று வணங்கிய கூலி உண்டு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸயீ 1381)
இதே கருத்தில் அமைந்த பல்வேறு ஹதீஸ்களில் "வாகனத்தில் வராமல்..." என்பதும் சேர்த்து அறிவிக்கப் பட்டுள்ளது.

ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களின் முக்கிய கடமை :-
ஜும்ஆ நாளில் செய்ய வேண்டிய அமல்களில் மிக முக்கிய கடமையான ஜும்ஆ தொழுகையின் சிறப்புகள், அதை விடுவதால் ஏற்படும் விளைவுகள் ஆகியவற்றை காண்போம்.
இன்று உலகில் ஒருவரிடம் ஒட்டகம், மாடு, ஆடு, கோழி, முட்டை ஆகியவற்றைக் கொடுத்து, இதில் ஏதேனும் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அவர் எதைத் தேர்வு செய்வார்? ஒட்டகத்தைத் தான் தேர்வு செய்வார். ஏனெனில் அது தான் இருப்பதிலேயே அதிக விலை மதிப்பு கொண்டது. இது உலக விவகாரத்தில்! ஆனால் மறுமை விஷயத்திலோ அவர் இவ்வாறு தேர்வு செய்வதில்லை.
"ஒருவர் ஜும்ஆ நாளில் கடமையான குளிப்பைப் போன்று குளித்து விட்டுப் பள்ளிக்கு வந்தால்
·         ஒரு ஒட்டகத்தை அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
·         இரண்டாம் நேரத்தில் வந்தால் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
·         மூன்றாம் நேரத்தில் வந்தால் கொம்புடைய ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
·         நான்காம் நேரத்தில் வந்தால் ஒரு கோழியைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
·         ஐந்தாம் நேரத்தில் வந்தால் முட்டையைக் குர்பானி கொடுத்தவர் போலாவார்.
இமாம் பள்ளிக்கு வந்து விட்டால் வானவர்கள் ஆஜராகிப் போதனையைக் கேட்கின்றார்கள்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 881)
இந்த ஹதீஸைத் தெரிந்த பிறகும் நாம் ஒட்டகத்தைத் தேர்வு செய்யாமல் தாமதமாகலாமா?

பரிசு தருவதற்காக பதிய வரும் மலக்குகள் :-
"ஜும்ஆ நாள் வந்ததும் பள்ளியின் பாகங்களில் உள்ள ஒவ்வொரு வாசலிலும் மலக்குகள் நிற்கின்றனர். முதன் முதலில் வருபவரை லி அடுத்து வருபவரைப் பதிவு செய்கின்றனர். இமாம் (மிம்பரில்) உட்கார்ந்ததும் தங்கள் ஏடுகளைச் சுருட்டிக் கொண்டு உரையைக் கேட்க வந்து விடுகின்றனர்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1416)
நம்முடைய பெயர்கள் வெள்ளியன்று பள்ளிக்கு வரும் மலக்குகளின் பதிவேட்டில் பதியப்பட வேண்டுமெனில் நாம் இமாம் மிம்பரில் ஏறுவதற்கு முன்பே பள்ளிக்கு வந்தாக வேண்டும்.

நன்மைகளைப் பறித்து விடும் நச்சுக் கிருமிகள் :-
"இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடுஎன்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 934)
"யார் (தரையில் கிடக்கும்) கம்பைத் தொ(ட்டு விளையா)டுகின்றாரோ அவர் (ஜும்ஆவை) பாழாக்கி விட்டார்" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1419)

''மூன்று பேர்கள் ஜும்ஆவிற்கு வருகின்றார்கள். ஒருவர் ஜும்ஆவிற்கு வந்து (குத்பாவின் போது பேசி) வீணாக்குகின்றார். இதுவே அவரது ஜும்ஆவில் கிடைத்த அவருடைய பங்காகும்.
இன்னொருவர் ஜும்ஆவிற்கு வந்து பிரார்த்திக்கின்றார். இவர் மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தவராவார். அவன் நாடினால் அவருக்கு வழங்குவான். அவன் நாடினால் அவருக்கு (கொடுக்காமல்) தடுக்கின்றான்.
மூன்றாமவர் ஜும்ஆவிற்கு வந்து மவுனத்துடன் வாய் பொத்தியுமிருந்தார். எந்த ஒரு முஸ்லிமின் பிடரியையும் தாண்டவில்லை. யாருக்கும் தொந்தரவு கொடுக்கவில்லை. இந்த ஜும்ஆ அதை அடுத்து வரும் ஜும்ஆ வரையிலும் இன்னும் மூன்று நாட்கள் வரையிலும் (செய்த பாவங்களுக்கு) பரிகாரமாகும்.
ஏனெனில் மகத்துவமும், கண்ணியமும் பொருந்திய அல்லாஹ், "நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு (பரிசு) உண்டு. தீமை செய்தவர் தீமை செய்த அளவே தண்டிக்கப் படுவார்" என்று (6:160 வசனத்தில்) கூறுகின்றான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத் 939)
இந்த மூன்று பேர் பட்டியலில் நாம் முதலாமவர் பட்டியலில் இடம் பெற்று ஜும்ஆவின் பலனை இழந்து விடக் கூடாது.
ஜும்ஆ தொழாதவருக்கு ஏற்படும் பாதிப்புகள் :-
எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு வெள்ளிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கியது போன்று யூதர்களுக்கு சனிக்கிழமையைப் புனித நாளாக ஆக்கினான். அந்த நாளின் வணக்கத்தை அவர்கள் பேணாமல் வரம்பு மீறி கடலுக்குச் சென்றதால் அவர்கள் குரங்குகளாக மாற்றப்பட்டனர். இந்த வரலாற்றை அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.
''கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டுவீராக! சனிக்கிழமையன்று மீன்கள் நீரின் மேல் மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ்வாறு அவர்களைச் சோதித்தோம்.
அல்லாஹ் அழிக்கப் போகிற அல்லது கடுமையாகத் தண்டிக்கப் போகிற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினர்.
கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை (மட்டும்) காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடுமையாகத் தண்டித்தோம். தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது "இழிந்த குரங்குகளாக ஆகி விடுங்கள்!" என்று அவர்களுக்குக் கூறினோம். (அல்குர்ஆன் 7:163,166)


இந்த வரலாற்றை நாம் படிப்பினையாக எடுத்துக் கொண்டு ஜும்ஆ தொழுகை நேரத்தின் போது தொழுகையை விட்டு விட்டு வரம்பு மீறிச் சென்று அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி விடக் கூடாது.




இதயங்கள் இறுகி விடும் :-
ஜும்ஆ தொழுகைகளை விடுவதை விட்டும் ஒரு கூட்டம் விலகிக் கொள்ளட்டும்! இல்லையேல் அல்லாஹ் அவர்களது உள்ளங்களில் முத்திரையிடுவான்; அவர்கள் கவனமற்றவர்களாக ஆவார்கள்!" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிம்பர் படிகளில் நின்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1432)
"அலட்சியமாக மூன்று ஜும்ஆக்களை யார் விட்டு விட்டாரோ அவரது உள்ளத்தில் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகின்றான்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுல் ஜஃது ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி 460)


இல்லங்கள் எரிக்கப்பட வேண்டும் :-
"ஒரு கூட்டத்தாருக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் ஜும்ஆவிற்கு வராமல் இருந்து விடுகின்றனர். நான் ஒருவரை மக்களுக்குத் தொழுவிக்கச் செய்யுமாறு உத்தரவிட்டு விட்டு, ஜும்ஆவிற்கு வராமல் தங்களுடைய வீடுகளில் இருக்கும் ஆட்களை கொழுத்தி விட எண்ணி விட்டேன்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 1043)

இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையை கவனத்தில் கொண்டு ஜும்ஆவைத் தவற விடாமல் பேணுவோமாக!

About Me

My photo
Share the information which attract me.

image

Lorem ipsum dolor sit

Aliquam sit amet urna quis quam ornare pretium. Cras pellentesque interdum nibh non tristique. Pellentesque et velit non urna auctor porttitor.

image

Nunc dignissim accumsan

Vestibulum pretium convallis diam sit amet vestibulum. Etiam non est eget leo luctus bibendum. Integer pretium, odio at scelerisque congue.